Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கர்ப்பிணிகள் மகிழ்ச்சி, ஆரோக்கியமாக இருக்க மாவட்ட ஆட்சியர் ச.உமா அறிவுரை

செப்டம்பர் 27, 2023 11:13

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சி, கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் சமூக நலத்துறையின் சார்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமை தாங்கினார். நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் திரு.ஈ.ஆர்.ஈஸ்வரன், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், நகரமைப்பு மண்டல திட்ட குழு உறுப்பினருமான எஸ்.எம்.மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா பேசியதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எண்ணற்ற திட்டங்களை பெண்கள் நலனை கருத்தில் கொண்டு செயல்படுத்தி வருகின்றார்.

அதன்படி, கர்ப்பிணி தாய்மார்களுக்கு பாதுகாப்பான தாய்மையை உறுதி செய்தல், கர்ப்ப கால பராமரிப்பு குறித்த தகவல்களை கர்ப்பணித் தாய்மார்களை சென்றடைய செய்து, பின்பற்றுவதை உறுதி செய்தல், கர்ப்பிணிகள் இறப்பு விகிதத்தை குறைத்தல், சிசு மரணத்தை குறைத்தல், குழந்தைகளின பிறப்பு எடை 3 கிலோவாக இருக்க வேண்டியதின் அவசியத்தை உயர்த்துதல், மருத்துவமனையில் பிரசவம் மேற்கொள்ள வேண்டியதின் அவசியத்தை உணர்த்துதல், மகப்பேறு உதவித் திட்டங்கள், தாய்ப்பாலின் அவசியம் மற்றும் நன்மைகள், இணை உணவின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவற்றை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு சமுதாய வளைகாப்பு விழாவினை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றது. 
    

அதன் தொடர்ச்சியாக, நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கொடு ஊராட்சி ஒன்றியம் மற்றும் திருச்செங்கொடு நகராட்சியை சேர்ந்த 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் 15 வட்டாரங்களிலும் சுழற்சி முறையில் நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு முதல்வர் உத்தரவின்படி, கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர் வரிசை பொருட்கள், மதிய உணவு உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது.  முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், குடும்பத் தலைவிகள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட முகாமிற்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்டவைகளை கொண்டு சென்று எந்தவொரு சிரமமுன்றி விண்ணப்பித்து, தற்போது தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,000/- அவரது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

இது குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை அல்ல, உரிமைத் தொகையாகும். இது போன்று பெண்களுக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. 

    கர்ப்பிணி தாய்மார்களுக்கு முதல் 1000 நாட்கள் மிக முக்கியமான நாட்கள் ஆகும். மேலும் கர்ப்பிணி தாய்மார்கள் கருவுற்ற காலங்களில் 12 கிலோ எடை கூடினால் மட்டுமே 3 கிலோ எடையுள்ள குழந்தைகள் பெற்றெடுக்க முடியும்.

எனவே இந்த காலக்கட்டத்தில் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடர்ந்து பரிசோதனை மேற்கொண்டு, மருத்துவரின் ஆலோசனைகளை பெற வேண்டும். கர்ப்பிணி தாய்மார்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். தொடர்ந்து ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் மீதமுள்ள 14 வட்டாரங்களிலும் 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு செப்டம்பர் 29 ஆம் தேதிக்குள் சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்தார். 
    
இந்நிகழ்ச்சியில், திருச்செங்கோடு நகர்மன்றத் தலைவர் நளினி சுரேஷ்பாபு, திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சுஜாதா தங்கவேல், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் (பொறுப்பு) ஜி.மோகனா, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்